(தாங்கள் வந்த காரியம் முடிந்ததும் கடம்ப ராஜ்யத்தின் நான்கு தூதர்கள் இரண்டு கைதிகளுடன் மகிழ்ச்சியுடன் தங்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குந்தள வீரர்கள் பாதையில் அவர்களை வழி மறித்து கைதிகளை விடுவித்துத் தங்களுடன் அழைத்துச் சென்றனர். தூதர்களில் இருவர் கொல்லப்பட, மற்ற இருவரும் தப்பித்து விட்டனர். பிறகு...)
தப்பியோடிய கடம்ப நாட்டு தூதர்களின் மீது குந்தள வீரர்கள் தொடர்ந்து அம்புகள் எய்திக் கொல்ல முயன்றும், அவை அவர்கள் மீது படவில்லை. இரு தூதர்களும் தப்பி விட்டதையெண்ணி குந்தள வீரர்களின் தலைவனுக்குக் கவலை உண்டாயிற்று. அந்த நால்வரில் ஒருவரும் உயிருடன் நாடு திரும்பக் கூடாது என்று மந்திரி கட்டளைஇட்டிருந்தார். எத்தனையோ எச்சரிக்கையுடன் தாக்கியும், நால்வரில் இருவர் தப்பிவிட்டதைஎண்ணி அவனுக்குக் கலக்கம் உண்டாயிற்று. அதற்குள் குந்தள நாட்டின் எல்லையே வந்து விட்டது. ‘நதிக்கு அப்பால் கடம்ப நாடு. எனவே நதியைத் தாண்டிச் சென்று அவர்களைத் துரத்துவது விவேகமல்ல! அங்கு கடம்ப எல்லைக் காவல் வீரர்கள் தூதர்களின் உதவிக்கு வரக்கூடும். அதே சமயம், தூதர்களை உயிரோடு தப்பவிட்டால், மந்திரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்’ என்று எண்ணிக் கவலையடைந்த அவன், "உங்களில் யாராவது கடம்ப நாட்டினுள் நுழைந்து தப்பியோடிய அந்த இருவரையும் கொல்ல முடியுமா?" என்று தன் வீரர்களைக் கேட்டான்.
|