பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் ஒரு சிங்கமாகப் பிறந்தார். அந்தச் சிங்கம் தன் மனைவியோடு ஒரு மலையின் குகையில் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் வேட்டையாடப் போன அந்த சிங்கம் ஒரு குளத்தருகே பல முயல்களும் மான்களும் இருப்பது கண்டு பலமாகக் கர்ஜித்தவாறே பாய்ந்தது. சிங்கத்தின் கர்ஜனை கேட்டு முயல்களும் மான்களும் ஓடி விட்டன. ஆனால் வேகமாய்ப் பாய்ந்துவந்த சிங்கம் குளக்கரையில் உள்ள பெரிய பள்ளத்து சேற்றில் போய் விழுந்து சிக்கிக் கொண்டது. அதிலிருந்து அது எழுந்து வர முடியாமல் தத்தளித்தது. அது மேலே வரத் தன் கால்களை அழுத்திய போது கீழேதான் போயிற்று. தன்னை யாராவது காப்பாற்ற வருவார்களா என அது பார்க்கலாயிற்று. ஆனால் யாருமே வரவில்லை. ஒரு நாளல்ல இரண்டு நாள்களல்ல, இந்த நிலையில் அது ஏழு நாள்கள் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஒரு நரி அவ்வழியே வந்ததை அது பார்த்தது. நரி சிங்கத்தைப் பார்த்து பயந்து சற்று தூரத்திலேயே நின்று விட்டது. சிங்கமோ தம்பி! பயப்படாதே. உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஒருவார காலமாக உணவின்றி இங்கே அகப்பட்டுத் தவிக்கிறேன். என்னைக் காப்பாற்று" என்றது. |
|
|